பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என மு.க.ஸ்டாலின் பேச்சு.
சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுத்துள்ள தி.மு.க.வின் கோடானு கோடி தொண்டர்களுக்கு என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தை முதலில் தெரிவித்து கொள்கிறேன்.
ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்தும், ஒருவருக்கொருவர் தட்டிக் கொடுத்தும் மாவட்ட கழக நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்துள்ளார்கள். அதாவது பொறுப்புகள் தகுதியானவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. போட்டி நடப்பது மட்டு மல்ல விட்டுக் கொடுப்பதும் ஜனநாயக நடைமுறையில் ஒன்றுதான். மாவட்ட கழக செயலாளர்கள் தேர்தலில் மோதல் நடக்கும், சலசலப்பு இருக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் ஆசையில் மண் விழுந்தது. எதிர்க்கட்சியினர் தங்களுக்கு சொல்லிக் கொள்வதற்கு எந்த பெருமையும் இல்லாத காரணத்தினால் நம்மை அவமானப்படுத்த பார்பார்கள்.
இதனை நாம் எதிர்கொண்டாக வேண்டும். மக்களுக்கு நாம் செய்து கொடுத்த நலத்திட்டங்களின் மூலம் எதிர் கொள்ள வேண்டும். நமது சாதனைகள் தான் அவர்களின் புகார்களுக்கு பதிலாக இருக்க முடியும். நான் செல்லும் இடமெல்லாம் மக்களின் முகங்களில் மலர்ச்சியை பார்க்கிறேன். தேசிய அரசியலில் முக்கிய சக்தியாக திகழ பாராளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 நாம் தான் உறுதியாக வெல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. முழு வெற்றியை பெற்றாக வேண்டும் என்று நீங்கள் அனைவரும் உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.