• Sun. May 19th, 2024

பாசன கால்வாயில் கழிவுநீர் கலந்து நுரை போல் பொங்கும் தண்ணீர்..!

ByKalamegam Viswanathan

Oct 14, 2023

மதுரை அவனியாபுரம் அயன்பாப்பாகுடி பாசன கால்வாயில் திடீரென கழிவுநீர் கலந்து பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரையிலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அவனியாபுரம் அயன் பாப்பாகுடி, வெள்ளக்கல் கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாய்கிறது. இந்த நிலையில் தொடர் மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அயன்பாப்பாக்குடி கண்மாயில் மழை நீரோடு கலந்து பாசன கால்வாயில் திறக்கப்படும் தண்ணீரில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை நுரையாக வருகிறது.
மேலும் நுரை மலை போல் பெருகி காற்றில் பறந்து அருகில் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் பறப்பதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. அடிக்கடி மழை பெய்யும் சமயங்களில் எல்லாம் இது போன்ற பிரச்சனை வருவதால் இதற்கான காரணத்தை கண்டுபிடித்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *