




ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இரு நாடுகளும் தங்கள் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இதனால் எல்லை பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக, நாடு முழுவதும் இன்று 259 இடங்களில் போர் கால பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

அந்த வகையில் புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே உள்ள பகுதியில் போர்கால பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஒத்திகையில் புதுச்சேரி காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், ஊர்காவல் படையினர், போக்குவரத்து காவலர்கள், என்.சி.சி மாணவர்கள் என பல்வேறு பிரிவினர் கலந்துகொண்டு ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்த போர் ஒத்திகை, போர் தயார் நிலையை சரிபார்ப்பதற்கான பாதுகாப்பு பயிற்சி மட்டுமே எனவும், போர்க்கால ஒத்திகை குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை, எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

