• Wed. Apr 24th, 2024

தவறான தகவல்களை பரப்பும் யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை… திருப்பதி தேவஸ்தானம்

Byகாயத்ரி

Dec 20, 2021

‘திருப்பதி தேவஸ்தானம் குறித்து சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை பக்தர்கள் நம்ப வேண்டாம். அவதூறு தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து திருப்பதி- திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கு காலத்தில் 21 நாட்கள் ஏழுமலையானுக்கு நைவேத்தியம் சமர்ப்பிக்கவில்லை.

பூஜைகள் செய்யவில்லை என ஒரு யூடியூப் சேனலில் தவறான தகவல்கள் பரப்பி வரப்படுகிறது. ஊரடங்கின்போது, பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. பூஜைகள், நித்ய கைங்கர்யம், நைவேத்தியம் சமர்ப்பித்தல் வழக்கம்போல் நடந்தது.இந்து மதத்தை பரப்பவும், மதமாற்றத்தை தடுக்கவும், சமரசதா சேவா அறக்கட்டளை ஒத்துழைப்புடன் ஆந்திர மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் தொலைதூர பகுதிகளை சேர்ந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த எஸ்சி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மீனவர்களை, அக்டோபர் 7 முதல் 14 வரை திருமலைக்கு இலவசமாக அழைத்து வந்து பிரமோற்சவத்தின்போது, சுவாமி தரிசனம் செய்து வைக்கப்பட்டது.

அதேபோல், வைகுண்ட ஏகாதசியொட்டி, வைகுண்டம் வாயில் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்து வைக்க அறங்காவலர் குழு முடிவு செய்தது. ஆனால், இதனை சாதிவாரியாக பிரிப்பதாக சமூக வலைதளத்தில் தவறான பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், ஏழுமலையான் கோயில் நிதியில் இருந்து, மாநில அரசு வேறு மதங்களை சேர்ந்தவர்கள் செல்லும் ஜெருசலேம், ஹஜ் யாத்திரைக்கு நிதியுதவி செய்வதாகவும் யூ டியூப் மூலம் தவறான குற்றச்சாட்டுகள் பரப்பி வருகின்றனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் பசு பாதுகாப்புக்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், திருப்பதி பலமனேரில் உள்ள கோசாலைகளில் நாட்டு மாடுகளை பாதுகாப்பதுடன், அவற்றின் இனப்பெருக்கத்துக்கு பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உள்ள நிலையில், உலகில் வேறு எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இங்கு பல இந்து தர்ம கலாசாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.ஆனால், சமூக வலைதளத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் குறித்து பக்தர்களுக்கு யூ டியூப் மூலம் தவறான பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த உண்மைக்கு புறம்பான தகவல்களை பக்தர்கள் நம்ப வேண்டாம்.

அவ்வாறு அவதூறு பிரசாரம் செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *