• Mon. Apr 21st, 2025

பரபரப்பான சூழலில் வக்ஃப் மசோதா இன்று தாக்கல்!

ByP.Kavitha Kumar

Apr 2, 2025

பரபரப்பான சூழலில் வக்ஃப் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்த மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

வக்ஃப் வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களை கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024 ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

நாடாளுமன்ற கூட்டு குழு பரிந்துரை செய்தபடி, மத்திய வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டு, மத்திய அமைச்சரவையும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது.

இத்தகைய சூழலில், மக்களவையில் இன்று வக்ஃப் மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது நாடாளுமன்றத்தில் மிக முக்கியமான மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதால், எம்.பிக்கள் அனைவரும் தவறாது அவை நடவடிக்கையில் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தங்கள் கட்சி எம்.பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது. வக்ஃப் வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.