வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக, போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில்…விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆட்டோ சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அவர்கள் ஒரு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
காரணம், இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளுக்கு மட்டுமே பொதுவான சின்னம் வழங்கப்படும். விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவில்லை என்பதால் பொது சின்னமாக ஆட்டோ சின்னத்தை வழங்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்கள்
அதனால் விஜய் ரசிகர்கள் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட முடிவெடுத்துள்ளனர். அதோடு, அனைவருமே விஜய் மக்கள் இயக்கத்தின் கொடி மற்றும் விஜய்யின் புகைப்படங்களை பயன்படுத்தி தேர்தல் களத்தில் இறங்குகிறார்கள் இதுகுறித்த ஒரு முக்கியமான கூட்டம் நேற்று ஜனவரி 29ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் அமைந்திருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
சில தினங்களுக்கு முன் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய்யைச் சந்தித்து பேசினார். அதற்கு முன்னதாகவே விஜய்யும் தனக்கு நெருக்கமான தனிப்பட்ட நண்பர்களுடன் தற்போதைய அரசியல் சூழல் தொடர்பான ஆலோசனைகளை செய்துள்ளார். இந்தப் பின்னணியில் தன்னை சந்தித்த புஸ்ஸி ஆனந்திடம் தேர்தல் தொடர்பான முக்கியமான சில முடிவுகளை விஜய் தெரிவித்துள்ளார்.நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளுக்கும் நாம் போட்டியிட வேண்டாம். நமக்கு எங்கே வெற்றிக்கான வாய்ப்புகள் இருக்கிறதோ அங்கு மட்டும் போட்டியிடலாம்அதிகமான இடங்களில் வேட்பாளரை நிறுத்தி குறைவான வாக்குகளைப் பெற்று நமது மதிப்பை குறைத்துக்கொள்ள வேண்டாம். நமது நிர்வாகிகள், ரசிகர்களின் உழைப்பும் வீணாக வேண்டாம்” என்று புஸ்ஸி ஆனந்த்திடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் விஜய்.
இந்த அடிப்படையில்தான் நேற்று பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் காலை 11:15 மணிக்குத் தொடங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதியம் 1:45 நடைபெற்று முடிந்து இருக்கிறது இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 150 விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
ஏற்கனவே விஜய்யிடம் நடத்திய ஆலோசனையின்படி இக்கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த்,உள்ளாட்சித் தேர்தலில் நாம் யாருடனும் கூட்டணி இல்லை. நாம் தனித்து தான் போட்டியிட இருக்கிறோம். போட்டியிட விருப்பமுள்ளவர்கள் அந்தந்த மாவட்ட தலைவர்களிம் விண்ணப்பியுங்கள்
நமது மக்கள் இயக்கம் வலுவாக இருக்கும் பகுதிகள், நமது செல்வாக்கில் வெற்றி பெறுவோம் என்று நாம் உறுதியாக நம்பக்கூடிய பகுதிகளில் மட்டும் நாம் நின்றால் போதும். அனைத்து இடங்களிலும் நின்று நம் உழைப்பை விரயமாக்க வேண்டாம். இப்போதைக்கு யாரையும் பகைத்துக் கொள்ளவும் வேண்டாம்.இப்போது நமக்கு பொது சின்னம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. அது குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளோம். தலைவர் விஜய் நமது வேட்பாளர்களுக்கு ஆட்டோ சின்னம் கிடைப்பதற்கான முயற்சிகளில் இறங்க சொல்லி இருக்கிறார்” என்றவுடன் கைதட்டல் அதிகரித்தது.தொடர்ந்து பேசிய ஆனந்த், “2025இல் நீங்கள் நினைக்கும் இடத்தில் நமது தளபதி இருப்பார். அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து தேர்தலை சந்தித்து வெற்றிகளைப் பெறுவோம்” என்று பேசியிருக்கிறார்.போட்டியிடாத இடங்களில் உங்கள் விருப்பப்படி தனிப்பட்ட முறையில் யாரை வேண்டுமானாலும் ஆதரியுங்கள் என்று கூட்டத்தில் சொல்லி இருக்கிறார்கள். பனையூரில் நடந்த கூட்டத்தை நடிகர் விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து காணொலி மூலமாகப் பார்த்திருக்கிறார்.