
உசிலம்பட்டியில் பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி உற்சவ விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட மேலப்புதூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பத்திரகாளியம்மன், தெப்பத்து கருப்பசாமி கோவில். இக்கோவிலின் வைகாசி உற்சவ திருவிழா இன்று முதல் 5 நாட்களுக்கு வெகுவிமர்சையாக நடைபெற உள்ளது.

முதல் நாளான இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளான தேனி ரோடு, மதுரை ரோடு, பேரையூர் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று கோவிலில் நிறைவுற்றது.

முளைப்பாரி ஊர்வலத்தில் அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி மக்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து கோவில் மூல ஸ்தானத்தில் உள்ள பத்திரகாளியம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
