நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் பங்கேற்றார். அப்போது அவருக்கு நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் குமார் தலைமையில் பாஜகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
திருச்செங்கோட்டில் பாஜக சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் எல். முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கட்சியின் மாநில துணை தலைவர் டாக்டர் கே. பி. இராமலிங்கம் முன்னிலை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் குமார் தலைமை வகித்தார்.
தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தவர்களை, அமைச்சர் முருகன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
இதனையடுத்து திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறி சந்தையில், மாவட்ட பாஜக சார்பில் அமைக்கப்பட்ட பிரதமரின் கருத்து கேட்பு முகாமை இணை அமைச்சர் முருகன் பார்வையிட்டார்.
அப்போது, பொதுமக்களின் கருத்துக்கள் / ஆலோசனைகள் ஆகியவற்றை பிரதமருக்கு வழங்கும் வகையில் பொதுமக்கள் எழுதியுள்ள கருத்துக்களை அதற்கான வைக்கப்பட்ட பெட்டியில் அளித்தனர்.
அப்போது பேசிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், பிரதமர் நரேந்திர மோடி, வலிமையான பாரதம் வளர்ச்சி அடைந்த பாரதம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என கேட்டுக் கொண்டார். அதனடிப்படையில் பாஜக சார்பில் கருத்துக் கேட்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் பொது மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள், இளைஞர்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், தொழிலாளர்கள், அனைத்து தரப்பு மக்கள் இந்த முகாம்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டு, நமது நாட்டின் நலனுக்கும், வளர்ச்சிக்கும் தகுந்த கருத்துக்களை ஆலோசனைகளை ஒரு வெள்ளைத் தாளில் எழுதி இங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போடுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் இந்த கருத்துக்கள் ஆலோசனைகள் பிரதமரிடம் கொண்டு சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் நாமக்கல் மாவட்ட தலைவர் செல்வகுமார் பாஜக நிர்வாகிகள் சிவகாமி பரமசிவம், மகேஸ்வரன் ரமேஷ், ஈஸ்வரன், தினேஷ்குமார், பாலமுருகன், பூங்குழலி, பிரகாஷ், செங்கோட்டுவேல், சசிதேவி, ஐயப்பன்,நாகராஜ் ஆகியோர் உள்ளிட்ட பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.