ஆப்கானிஸ்தானில் பசி, பட்டினி, நோயால் வாடும் குழந்தைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்வதேச குழந்தைகள் தினமான இன்று ஆப்கன் யுனிசெப் அமைப்பானது கொண்டாட்டங்களைப் புறக்கணித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பெருகிவரும் மனித உரிமை சர்ச்சையால் அந்நாட்டுக் குழந்தைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச குழந்தைகள் தினமான இன்று ஆப்கன் குழந்தைகளின் துயரத்தை உணர்ந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து ஆப்கானிஸ்தானுக்கான யுனிசெப் பிரதிநிதி ஆலிஸ் அகுங்கா கூறுகையில், “இந்த ஆண்டு சர்வதேச குழந்தைகள் தினத்தை கொண்டாடவில்லை. ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு குழந்தையும் சந்தித்து வரும் இன்னலைக் கருத்தில் கொள்ளும்போது, குழதைகள் தினத்தைக் கொண்டாடவே முடியாது.மேலும், ஆப்கன் யுனிசெப் இணையதள சேவைகளைக் கிளிக் செய்தால் வெறும் கருப்பு நிறம் மட்டுமே தென்படும். இதன் மூலம் ஆப்கன் குழந்தைகளுக்கு உதவி செய்யுமாறு உலக நாடுகளுக்கு ஒரு செய்தியைக் கடத்த முயற்சிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.