• Sun. May 12th, 2024

வகை வகையான சீட்டு வாரிச் சுருட்டு : பணமோசடி புகார்

Byவிஷா

Feb 2, 2024

‘வகை வகையான சீட்டு வாரிச் சுருட்டு’ என்பதைப் போல தீபாவளிச் சீட்டு, மாதச்சீட்டு, நகை சீட்டு என பல்வேறு சீட்டுகளை நடத்தி பணத்தை மோசடி செய்த சீட்டு நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காட்டுப்பாக்கத்தில் செய்யாறை சேர்ந்த அந்தோணிராஜ் சில ஆண்டுகளாக தீபாவளி சீட்டு, மளிகை சீட்டு, மாத தவணை சீட்டு என பல்வேறு சீட்டுகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் சீட்டை முழுமையாக முடித்தவர்களுக்கு பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு பொருட்களை தராமல் மோசடி செய்ததாக உரிமையாளரை போலீசார் கைது செய்தனர், தற்போது பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் கிளை அலுவலகத்திற்கு மோசடிக்கு ஆளானவர்கள் வந்தபோது அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.
இதனால் பண மோசடிக்கு ஆளான 50க்கும் மேற்பட்ட பெண்கள் காட்டுப்பாக்கம் அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அந்த வழியாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து பூந்தமல்லி போலீசார் அங்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் பலர் மயங்கி கீழே விழுந்தபோது, உடன் வந்தவர்கள் தண்ணீர் கொடுத்து உதவினர்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “செய்யாறு பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகங்களை திறந்து தீபாவளி சீட்டு, மாத சீட்டு, நகை சீட்டு என பல்வேறு சீட்டுகளை நடத்தியது. ஏராளமான பெண்கள். 15 பேரை சேர்த்தால் இலவச கார்டு தருவதாக கூறி இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். காட்டுப்பாக்கத்தில் மட்டும் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.
இப்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதால், அவரது மனைவி பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளிக்க வேண்டும். தங்களை நம்பி இந்த சீட்டில் சேருபவர்கள் வீடுகளுக்கு வந்து பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *