அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை, வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ரமலான் எனப்படும் ரம்ஜான் பண்டிகை இந்த மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் நேற்று பிறை தென்பட்டது. இதனைத் தொடர்ந்து ரம்ஜான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அதில், “நோன்பிருந்து உறவுகளுடன், நட்பு நெஞ்சங்களுடன் அன்பைப் பரிமாறி, ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும், உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள். இந்நாளில் அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை, வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.