அரசின் சுற்றுச்சூழல் திட்டங்களை முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்துமாறு பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வேண்டுகோள் விடுத்தார்.
உத்தரகாண்டின் டேராடூன் மாவட்டம் முசோரியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய ஐ.ஏ.எஸ். பயிற்சி அகாடமியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அப்போது அவர் இளம் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:- இளம் அதிகாரிகளாகிய நீங்கள் கனவு காணும் இந்தியாவை நனவாக்கும் நிலையில் இருக்கிறீர்கள். சிவில் சர்வீசஸ் என்பது நாட்டுக்கு சேவை செய்யும் ஒரு பாதை ஆகும். இது ஒரு கொள்கை அடிப்படையிலான வாழ்க்கை, இதில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கிறீர்கள். சிறந்த குணநலன்கள்தான் உயர்ந்த நற்பண்பு என்று கூறும் அகாடமியின் பொன்மொழியை எப்போதும் உங்களுடன் எடுத்துச்செல்ல வேண்டும். நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வது உங்கள் அரசியலமைப்பு பொறுப்பு மற்றும் தார்மீக கடமை ஆகும். அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் கொள்கைகளை உருவாக்கும் செயல்பாட்டில் நீங்கள் முக்கிய பங்கு வகிக்கப்போகிறீர்கள். ஏழைகள், தாழ்த்தப்பட்ட பிரிவினரின் தேவைகளை நீங்கள் உணர்ந்தால் உங்கள் இலக்கை அடைவீர்கள். அனைத்து பிரிவினரும் இணைந்து செயல்பட்டால்தான் உண்மையான வளர்ச்சி ஏற்படும்.