மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையமானது மதுரை ரயில் நிலையத்துக்கு அடுத்து மிக முக்கியமான ரயில் நிலையமாக கருதப்படுகிறது குறிப்பாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்கிறது.

இதேபோல் தென் மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக சென்னை மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரயில்களும் சோழவந்தான் ரயில் நிலையத்தை கடந்து செல்லக்கூடிய நிலை உள்ளது. தினசரி சோழவந்தான் வழியாக சுமார் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கிறது.

இந்த நிலையில் சோழவந்தான் ரயில் நிலையத்தில் சோழவந்தான் பேட்டை முதல் ஆலங்கொட்டாரம் வரை அடிக்கடி ரயில் விபத்துக்கள் மற்றும் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விழுந்து தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு இந்த பகுதியில் ரயில் தண்டவாளங்களை ஒட்டி தடுப்பு சுவர் இல்லாததே காரணம் என ரயில் பயணிகள் பொதுமக்கள் கூறுகின்றனர். குறிப்பாக பேட்டை முதல் ஆலங்கொட்டாரம் வரை உள்ள ரயில் நிலைய பகுதியில் பொதுமக்கள் எளிதில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லக்கூடிய அளவிலேயே உள்ளது.

ஆகையால் இந்த பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்கும் பட்சத்தில் பொதுமக்கள் பயணிகள் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வதற்கான சூழல் ஏற்படாது என்றும் இதனால் ரயிலில் விழுந்து தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைய கூடிய வாய்ப்பு இருப்பதும் ரயில் விபத்துகளும் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் ரயில் பயணிகள் கூறுகின்றனர். ஆகையால் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் பொருட்டு பாதுகாப்பு கருதி சோழவந்தான் பேட்டை முதல் ஆலங்கொட்டாரம் வரை ரயில் தண்டவாளம் அருகே தடுப்பு சுவர் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




