வைகை அணையில் இருந்து கடந்த 27ஆம் தேதி முதல் திறந்துவிடப்பட்ட நீர் 12 ஆயிரம் கனஅடி வீதம் ராமநாதபுரம் மாவட்டம் பார்திபனூருக்கு தண்ணீர் வந்தடைந்தது. இதையடுத்து பார்த்திபனூரில் இருந்து 5,600 கன அடி தண்ணீர் கமுதியில் உள்ள பரளை ஆறுக்கு வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் செல்கின்றது. இந்த நிலையில், கமுதி அருகே செய்யாமங்கலம் கிராமத்திற்கு முன்பாக அமைந்துள்ள தரைப்பாலத்திற்கு மேல் மூழ்கி வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.
இதனால் ராநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த செய்யாமங்கலம், தாதனேந்தல், பிரண்டைகுளம், புதுப்பட்டி, முனியனேந்தல் உள்ளிட்ட ஐந்து கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலத்தில் இடுப்பளவிற்கு மேல் வெள்ளநீர் பெருக்கெடுத்து செல்வதால் அன்றாட வேலைக்கு செல்வோர் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் 5 கிராமத்திலுள்ள மக்கள் தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்ல முடியாமல் கிராமத்திலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், தரைப்பாலத்தில் கயிறு கட்டி ஆபத்தான முறையில் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் வேறு வழியின்றி பாலத்தை கடந்து செல்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.