தேனூர் கிராமத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் முதல் அறுவடை நெல்லை நெல்லை பாரம்பரியமாக அழகர் கோவிலுக்கு கொண்டு சென்று அழகருக்கு செலுத்துவது 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு ராஜேந்திரன் பாலையா என்பவரது வயலில் முதல் அறுவடை செய்த நெல்லை கிராம வழக்கப்படி சிறப்பு பூஜைகள் செய்து அழகர் கோவிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அழகரின் சொந்த ஊரான தேனூரிலிருந்து ஆண்டுதோறும் முதல் முறையாக அறுவடை செய்யும் நெல்லை அழகர் கோவிலுக்கு வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டும் முதல் அறுவடையின் ஒரு பங்கை கையாலேயே அறுவடை செய்து களத்தில் கதிர் அடித்து அதனை அலங்கரித்து நெல் குவியலாக குவித்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
கிராம ஏழு கரைகாரர்கள் முன்னிலையில் நெற்கதிரை அழகர் கோவிலுக்கு செலுத்தும் முதல் படி நெல்லை வைக்கோல் பிரியால் கட்டி பூசாரி பாண்டி தீபாராதனை செய்து வழிபட்டு நெல்லை மலையான் சாவடிக்கு கொண்டு சென்று வைத்து பின்னர் அதை அழகர் கோவிலுக்கு எடுத்துச் சென்று வழங்குவார்கள்.

இவ்வாறு அழகர் கோவிலில் வழங்கப்பட்ட நெல்லை அங்குள்ள மரியாதைக்காரர்கள் பெற்றுக் கொண்டு பூஜைகள் செய்து பிரசாதம் வழங்குவார்கள். அந்த பிரசாதத்தை திருப்பி கொண்டு வந்து தேனூர் கிராமத்திடம் ஒப்படைத்த பின்பு மற்ற வயல்களில் நெல் அறுவடை பணிகள் துவங்கும் இந்த பாரம்பரியமான பழக்கம் சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். இந்நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் ஏழு கரைகாரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.










