




கொடைக்கானலில் கோடை விடுமுறை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளின் வாகனம் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நிற்கின்றது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை விடுமுறை கொண்டாட பல்வேறு மாநிலங்கள் மாவட்டத்தில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்த நிலையில், கொடைக்கானல் நகர் பகுதியில் இருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய பல்வேறு சாலைகளில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் பல மணி நேரங்கள் காத்திருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், பிரதான சாலைகள் மற்றும் நகரின் உட்புற பகுதிகளில் பல்வேறு உணவு விடுதிகள், தங்கும் விடுதிகளில் முறையான வாகன நிறுத்தும் இடங்கள் இல்லாத காரணத்தால் அப்பகுதியில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தி வைக்கும் காரணத்தால் பெரும் அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளின் நலனை கருத்தில் கொண்டு சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் வாகன ஓட்டுநர் உரிமையாளர்கள் மீதும், தங்கும் விடுதிகளில் முறையான வாகன நிறுத்தம் இல்லாத விடுதி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, கொடைக்கானல் பிரதான சாலை மற்றும் நகரின் உட்புற சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு குறைவதற்கு வாய்ப்புள்ளது.

