• Sat. May 17th, 2025

பசுமாடு மீது சொகுசு வேன் மோதியதில் பசுமாடு பலி…

ByVasanth Siddharthan

May 2, 2025

நத்தம் அருகே சாலையின் குறுக்கே சென்ற பசுமாடு மீது, சொகுசு வேன் மோதியதில், பசுமாடு நிகழ்விடத்திலேயே பலியாயின.

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் இருந்து 10க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சொகுசு வேனில் தமிழகம் வந்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக துவரங்குறிச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் வழியாக வந்து கொண்டிருந்தனர். வேனை ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் சுரேஷ் (வயது 35) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் நத்தம் கல்வேலிபட்டி அருகே வேன் வந்து கொண்டிருந்த போது, நத்தம் கொண்டையம்பட்டியை சேர்ந்த கருப்பன் மகன் கருப்பசாமி (வயது 70) என்பவருக்கு சொந்தமான பசுமாடு சாலை நடுவே மேய்ந்து கொண்டிருந்தது. திடீரென சாலையின் குறுக்கே பசுமாடு வந்ததால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாட்டின் மீது சொகுசு வேன் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட பசு மாடு நிகழ்விடத்திலேயே துடி, துடித்து பலியானது. விபத்தில் சொகுசு வேனின் முன்பக்கம் சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் விபத்தில் சிக்கிய சொகுசு வேன் மற்றும் பலியான பசுமாடு ஆகியவற்றை அப்புறப்படுத்தினர். சொகுசு வேனில் வந்த அனைவரும் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர். நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

துவரங்குறிச்சி முதல் மதுரை வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேய்ச்சலுக்காக விடப்படும் மாடுகள் அடிக்கடி சாலைகளில் சுற்றித்திரிவதால் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறுவது தொடர் கதை ஆகி வருகிறது.