



போட்டித் தேர்வுகள் எழுதுபவர்கள் தமிழ்நாடு அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்ஸி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ், ஆர்ஆர்பி ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காளாஞ்சிப்பட்டி கிராமம், கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் 200 ஆர்வலர்களுக்கு வழங்கப்படுகிறது.
மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று புதிதாக சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் முற்பகல் 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் ஆர்வலர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2025 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.
பயிற்சியில் சேர விரும்பும் ஆர்வலர்கள் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய இணையதளம் www.cecc.in வாயிலாக இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04553-291269 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக நடைமுறைபடுத்தப்பட்டுள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப அரசால் தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு, ஆர்வலர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும், ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.

