• Fri. Apr 19th, 2024

கருத்தரிக்கவோ, கருவைக் கலைக்கவோ
பெண்ணுக்கு உரிமை உண்டு
கேரள ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

கருத்தரிக்கவோ, கருவைக் கலைக்கவோ பெண்ணுக்கு உரிமை உண்டு என்று கேரள ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
கேரள ஐகோர்ட்டில் 23 வயதான எம்.பி.ஏ. மாணவி ஒருவர் ஒரு வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கில் அவர் தனது சக மாணவர் ஒருவருடன் மனம் ஒருமித்து, பாலுறவு வைத்துக்கொண்டதாகவும், அதனால் தான் கர்ப்பம் தரித்து இருப்பது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாகவும் கூறி, தனது 26 வார கால கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி இருந்தார். இந்த வழக்கை நீதிபதி வி.ஜி. அருண் விசாரித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலையை டாக்டர்கள் குழு சோதித்து, அந்தக்குழுவின் அறிக்கையை கோர்ட்டு பெற்றது. அதில், பாதிக்கப்பட்டுள்ள மாணவி மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், கர்ப்பத்தைத் தொடர்வது அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவி கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள ஐகோர்ட் அனுமதி அளித்தது. இதுகுறித்த தீர்ப்பில், ஒரு பெண் கர்ப்பம் தரிக்கவும் அல்லது கர்ப்பத்தை தவிர்க்கவும் உள்ள உரிமைக்கு எந்தத் தடையும் இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து பெண்களுக்கு அரசியல் சாசனம் பிரிவு 21 உரிமை வழங்கி உள்ளதாகவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த மாணவி தனது கர்ப்பத்தை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அல்லது அதற்கான வசதிகளைக் கொண்ட பிற ஆஸ்பத்திரிகளிலோ கருக்கலைப்பு செய்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *