டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வை கடந்த மே மாதம் 21-ம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வை சுமார் 9.94 லட்சம் பேர் எழுதினர். முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஆகஸ்ட், செப்டம்பர் முடிந்து அக்டோபர் மாதம் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் முதன்மைத் தேர்வுக்காக தீவிரமாக பயிற்சி எடுத்து வரும் தேர்வர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், தேர்வாணையம் விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில், பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டு முறை தொடர்பான வழக்கின் காரணமாக குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இம்மாத இறுதியில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.