• Sat. Apr 20th, 2024

சசிகலா என்னை கொலை செய்ய முயன்றார்: ஜெ.தீபா குற்றச்சாட்டு..!

ByA.Tamilselvan

Oct 22, 2022

சசிகலாவும், அவருடைய குடும்பத்தினரும் என்னை கொலை செய்ய சதி செய்தனர் என்று, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் நடத்திய விசாரணையில் சசிகலா, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போது சுகாதாரத்துறை செயலராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன், டாக்டர் சிவகுமார் ஆகியோர் மீது சரமாரியாக குற்றம் சாட்டியது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ தீபா அளித்த பேட்டியில், “1994-ம் ஆண்டு இருசக்கர வாகன விபத்தில் நான் சிக்கினேன். அதில் இருந்து அதிர்ஷடவசமாக உயிர் தப்பினேன். பின்னர்தான் அது என்னை கொல்ல நடந்த முயற்சி என்பதை புரிந்து கொண்டேன். என் அத்தையுடன் (ஜெயலலிதா) நெருக்கமான தொடர்பில் இருந்த நிலையில் என் தந்தை ஜெயக்குமார் திடீரென 48 வயதில் மரணம் அடைந்தார். என் அப்பா இறந்த போது, எங்கள் வீட்டில் இருந்த புதிய வேலையாட்கள் அங்கிருந்து ஓடிப் போய்விட்டனர். என் அப்பாவை நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இறந்துவிட்டதாக தெரிவித்தனர். என் தந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என மருத்துவமனைக்கு சில அதிகாரிகள் மிரட்டல் விடுத்திருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம்.
இது தொடர்பாக அத்தை ஜெயலலிதா பின்னர் கேட்டறிந்தார் என தெரியவந்தது. என்னை கொலை செய்ய பலமுறை முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் ஆண்டவன் அருளால் நான் அவற்றில் இருந்து தப்பிவிட்டேன். இதனால்தான் அவர்களிடம் இருந்து நாங்கள் விலகி இருக்கிறோம்” என்று ஜெ.தீபா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *