53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஜெய்பீம் உட்பட மூன்று தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20ந் தேதி முதல் 28ந் தேதி வரை கோவாவில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை அம்சம் கொண்ட 25 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் தமிழில் ஞானவேல் இயக்கி சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம், எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல் மற்றும் ரா.வெங்கட் இயக்கிய கிடா ஆகிய மூன்று படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேசிய நீரோட்ட திரைப்படப்பிரிவில், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ், ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் உள்பட 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் கதை அம்சம் அல்லாத திரைப்படங்களில், லிட்டில் விங்க்ஸ் என்ற தமிழ்ப்படம் உள்பட 20 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தியன் பனோரமாவின் தேர்வுக்குழுவில் பிரபல இயக்குநரும், படத்தொகுப்பாளருமான வினோத் கனாத்ரா தலைமையில், ஒளிப்பதிவாளர் ஏ. கார்த்திக் ராஜா உள்பட 12 உறுப்பினர்கள் கொண்ட தேர்வுக்குழு இந்த திரைப்படங்களை தேர்வு செய்துள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.