திருப்பூரில் நடைபெறும் ம.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க துணை பொதுச் செயலாளர் துரை வைகோ விமான மூலம் கோவை வந்தடைந்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது :-
எங்களைப் பொறுத்த வரை எங்களுடைய இயக்கம் குறைந்தபட்ச அங்கீகாரம் பெற வேண்டும் அந்த அங்கீகாரத்தை பெறுவதற்கு குறிப்பிட்ட சீட்டை பெற வேண்டும் என்பது எங்களுடைய ஆசை என தெரிவித்தார். ஆனால் இறுதி முடிவு எடுப்பது இயக்கத்தின் தலைமை என்றும் தெரிவித்தவர்.
அதேசமயம் நாங்கள் இத்தனை சீட்டை எதிர்பார்க்கிறோம் டிமாண்ட் ஆக வைக்கிறோம் என்ற தவறான சித்தரிப்பு இருந்ததாகவும், ஆனால் இறுதி முடிவு கூட்டணி உடன் பேசி தலைமை தான் முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.
அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும் என பா.ம.க கட்சி குறித்து பேசிய அவர் கட்சிக்குள் இருப்பதை நிர்வாகிகளும், தொண்டர்களும் பேச வேண்டும் நாம் அதைப் பற்றி பேசக் கூடாது. அது நன்றாக இருக்காது என தெரிவித்தார்.
இயக்கத்தில் இருக்கக் கூடிய பிரச்சனைகளை அந்த இயக்கத்தின் தோழர்கள் தான் தீர்த்து வைக்க வேண்டுமே தவிர வெளி நபர்கள் எதையும் சொல்ல முடியாது என தெரிவித்தார்.
ரயில்வே துறையில் கட்டண உயர்வு குறித்து பேசிய அவர்,
அந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியதாகவும், ஒன்றிய அமைச்சரை தனிப்பட்ட முறையில் சந்தித்த பொழுதும் அதைப் பற்றி கூறியதாகவும், தெரிவித்தார்.
பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்கள் இல்லாமல், இதர மாநிலங்களுக்கு உரிய நிதியை வழங்குவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அது ஓரளவு உண்மை தான் என தெரிவித்த அவர், பள்ளிக் கல்வித் துறையில் மும்மொழி கொள்கைக்கு உடன்படாததால் அவர்கள் நிதியை அளிக்கவில்லை என தெரிவித்தார். இதனால் பல்வேறு அடிப்படை பாதிப்புகளை சந்தித்து வருவதாகவும் இது சம்பந்தமாக துறை சார்ந்த அமைச்சர்களிடமும், எங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மாணவர்களிடம் அரசியல் செய்யக் கூடாது என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு என தெரிவித்தார்.
ஒவ்வொரு கட்சியும் கூட்டணி கட்சிகளும் நாங்கள் ஜெயிப்போம் என்று கூறுவது வழக்கமான ஒன்று தான் எனவும், வாக்காளர்கள் தான் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கிறார்கள் என தெரிவித்தார்.
தமிழக அரசின் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர்களால் முடிந்ததை செய்து இருக்கிறார்கள் என தெரிவித்த அவர், ஓரிரு குறைகள் உள்ளது. இருப்பினும் அவர்களது தேர்தல் வாக்குறுதிகளை ஓரளவிற்கு நிவர்த்தி செய்து உள்ளார்கள் என தெரிவித்தார். மேலும் வரக் கூடிய தேர்தலில் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது என கூறினார். செப்டம்பர் 15 ஆம் தேதி திருச்சியில் தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய மாநாட்டை நடத்த உள்ளதாகவும் கூறினார்.
தேர்தல் வரக் கூடிய காலம் என்பதால் எங்களுடைய கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் பூத் கமிட்டிகள் அமைப்பது உட்பட ஏழு மண்டலங்களில் செயல்வீரர் கூட்டம் வைத்து உள்ளதாக கூறியவர்,

மூன்றாவது மொழியை கற்றுக் கொள்வதை ஏன் ? எதிர்க்கிறீர்கள் இன்று தமிழக பா.ஜ.க தலைமை கேட்கும் பொழுது அவர்களிடம் இரண்டு வருடத்திற்கு முன்பே மூன்றாவது மொழி எந்த மொழியாக வேண்டாலும் இருந்து கொள்ளட்டும் என கூறியதாக கூறினார்.
உலகமயமாக்கல் பற்றி பேசுகின்ற பொழுது ஆங்கில புலமை இருப்பதால் தான் நம்முடைய மாணவர்கள் பல்வேறு இடங்களில் ஆளுமை செலுத்துகிறார்கள் என தெரிவித்தார். ஆளுமை எல்லாம் இருமொழிக் கொள்கையினால் தான் வந்தது எனவும் குறிப்பிட்டார்.
AI தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அப்படி இருக்கும் பொழுது மூன்றாவது மொழியை மாணவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்த படிக்கலாம் என கூறியவர், அப்படி இருக்கும் பொழுது மூன்றாவது மொழி இந்திய மொழியாக தான் இருக்க வேண்டும் எனக்கு வருவது தவறு என குற்றம் சாட்டினார்.
வட மாநிலங்களில் அமித்ஷா ஆங்கில மொழி என்பது அந்நிய மொழி ஆங்கிலம் என்பது புறக்கணிக்கப்பட வேண்டும். ஆங்கிலம் இல்லாத பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும், ஆங்கிலம் இல்லாமல் நாம் எப்படி ? இருக்க முடியும் ? உலக தொடர்பு மொழியே ஆங்கிலம் தான் என துரை வைகோ தெரிவித்தார்.
மேலும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் ஆங்கிலம் இல்லாமல் நம்மால் செயல்பட முடியாது நம்முடைய தாய்மொழி ஒரு புறம் இருந்தாலும் உலக தொடர்பு மொழி என்பது ஆங்கிலம் தான் எனக்கு குறிப்பிட்ட அவர் மொழியை வைத்து பா.ஜ.க தான் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த மொழி பிரச்சனை குறித்து நான் கேள்வி எழுப்பியதற்கு தற்பொழுது வரை தமிழக பா.ஜ.க தலைமையிடம் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என தெரிவித்தார். மூன்றாவது மொழி இந்திய மொழியாக தான் இருக்க வேண்டும் என்று கூறுகின்ற பொழுது வேறு வழியில்லாமல் ஹிந்தி மொழி தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் இது மறைமுகமாக இந்தியை திணிப்பது என தெரிவித்தார்.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் தட்டுப்பாடு இருப்பதை மறுக்க முடியாது எனவும் அதற்கு நிதி பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும், தெரிவித்த அவர் இருப்பினும் தமிழக அரசு இதனை சரி செய்வதற்கு போதிய முயற்சிகளை எடுத்து வருவதாகவும் இதற்கான விளக்கத்தையும் அமைச்சர்கள் தெரிவித்து உள்ளார்கள் என தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக நிகழ்ந்த சில குளறுபடிகள் இன்றைக்கு இருக்கக் கூடிய நிதிச் சுமை நிதி பற்றாக்குறையால் அதனை சரி செய்ய முடியாமல் இருக்கிறது என குறிப்பிட்டார்.
பத்தாண்டுகள் ஏற்பட்டதை மூன்று நான்கு ஆண்டுகளில் சரி செய்து விட முடியாது என்றும் காலப் போக்கில் அதனை தமிழக அரசு சரி செய்து விடும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், 2009 ல் இலங்கை போர் முடிந்ததை தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வது என்பது தொடர்ந்த வருவதாகவும் பலரும் இறந்து இருப்பதாகவும் தெரிவித்த அவர், இதனால் மீனவர்கள் அவர்களது குழந்தைகளை இந்த மீனவத் தொழிலுக்கு அனுப்ப வேண்டாம் என்று நினைக்கிறார்கள் என தெரிவித்தார்.
அடுத்த தலைமுறை இந்த மீனவத் தொழிலே செய்ய முடியாது. என்கின்ற நிலைமை தற்பொழுது ஏற்பட்டு இருப்பதாகவும் இதற்கான நிரந்தர தீர்வை ஒன்றிய அரசுதான் கொண்டு வர முடியும் என தெரிவித்தார்.
மீனவர்களுக்கு தற்போது வரை நிரந்தர தீர்வு என்பது கிடைக்கவில்லை எனவும் மீனவ குடும்பங்கள் செத்துப் பிழைத்து வருவதாகவும் தெரிவித்த அவர் வாரம் தோறும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வது கொடுமையாக தாக்குவது நிகழ்ந்து வருவதாகவும் இதற்குரிய நிரந்தர தீர்வை ஒன்றிய அரசு கொண்டு வர வேண்டும் அது எந்த அரசாக இருந்தாலும் சரி என தெரிவித்த அவர் கடந்த காலங்களில் நடந்த தவறு என குறிப்பிடுவதை விட்டுவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.