மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள தேனூர் கிராமத்தில் வசித்து வருபவர் அம்சவள்ளி. இவர் தமது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் புதியதாக மூன்று சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் கத்தி, அருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீட்டில் பொருத்தியிருந்த சி.சி.டி.வி கேமராக்களை உடைத்தும், வீட்டின் உரிமையாளரான பெண் அம்சவள்ளியை வெளியே அழைத்து அரிவாளை காட்டி மிரட்டி வெட்ட முயன்றுள்ளனர். உடனடியாக சி.சி.டி.வி.கேமராவை அகற்றுமாறும் பெண்மணிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அம்சவள்ளி மதுரை சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகராளித்துள்ளார்.
போலீசார் சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ரகளையில் ஈடுபட்ட நால்வரும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் என்பதும், 4 வாலிபர்கள் மீதும் உடனடியாக வழக்குபதிவு செய்த சமயநல்லூர் போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.