கோடை வெயிலின் தாக்கம் மக்களைத் துன்புறுத்தி வரும் நிலையில், தேனி மாவட்டத்தில் சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக வெளுத்து வாங்கிய கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. பிற்பகல் வேளையில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள தேனி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இருந்தபோதிலும் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும் மாலைப்பொழுதில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில், தென் மாவட்டங்களில் காற்றழுத்த மாறுபாடு காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது.
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வௌ;வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வந்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரப் பகுதிகளிலும், கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம் மற்றும் கம்பம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் கடுமையாக நிலவி வந்த வெப்பம் தணிந்து உள்ளது. திடீரென சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் பெய்த மழையினால் கடும் கோடை வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.