தூத்துக்குடி மாவட்ட எல்லையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களைப் பார்வையிட முதல்வர் ஸ்டாலின் செல்லும்போது, கன்னியாகுமரி மாவட்டம் செல்லும் வழியில், தூத்துக்குடி மாவட்ட எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கு அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சியின்போது, கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி மாணவ, மாணவிகள் முதல்வரை வரவேற்பதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது மாணவ-மாணவிகளைக் கண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது வாகனத்தை நிறுத்தி, பள்ளி மாணவி பி.சந்தோஷினி அளித்த வைரமுத்து கவிதைகள் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார்.
பின்னர் மாணவியிடம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பள்ளிகள் திறந்து பாடம் நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் கேட்டார். அப்போது அந்த மாணவி, நீண்ட நாட்களாக நாங்கள் ஆன்லைனில் பாடம் கற்று வந்தோம். தற்போது பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் நடப்பதால் உற்சாகமாகப் படித்து வருகிறோம். பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டதற்கு நன்றி என முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தார்.