• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மழலை குழந்தை மீது கொடும் தாக்குதல் தொடுத்த கல்மனம் படைத்தவன்…

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை காவல் நிலைய பகுதியில் மல மாரி அஞ்சல் மாலைக்கோடு என்ற ஊரில் வசித்து வருபவர் பத்திரன் மகன் ஹரி. இவர் கேரளாவில் முடி திருத்தும் கடைக்கு வேலைக்கு சென்ற போது கேரளா மாநிலத்தை சேர்ந்த திருமணமான பெண்ணை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கடத்திக் கொண்டு வந்ததாகவும் அப்போது அப்பெண் கையில் சிறு கைக்குழந்தையுடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஹரி தற்போது புத்தன் சந்தை பகுதியில் முடிதிருத்தும் கடை வைத்துள்ளார். இந்நிலையில் அப்பெண்ணுக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால் இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அந்த பெண்ணின் முதல் குழந்தையை தன்னுடையது இல்லை என பல முறை தாக்கி சித்திரவதை செய்து வந்துள்ளார். தற்போது இரண்டாவது பிரசவத்திற்காக மருத்துவமனையில் அந்த பெண் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், தற்போது தாக்குதலுக்கு உள்ளான குழந்தை ஹரியுடன் வீட்டிலிருந்து உள்ளது.

குழந்தையை மோசமாக தாக்கியபோது, குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து வீட்டில் எட்டிப் பார்த்தபோது, ஹரி குழந்தையை தாக்கும் காட்சிகள் கண்டு அதிர்ந்து உள்ளனர். குழந்தையை அவரிடம் இருந்து மீட்ட போது உடலெங்கும் கம்பால் அடித்த காயங்களும் சிகரெட்டால் சூடு வைத்த காயமும் இருந்துள்ளது. உடனே ஹரியின் தாயார் மற்றும் தகப்பனார் மற்றும் ஊர் மக்கள் ஆகியோர் சேர்ந்து குழந்தையை இடைக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இடைக்கோடு அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை மேல்சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

உடனே காரில் ஹரியின் தாயார் மற்றும் நண்பர்கள் இருவர் ஆகியோர் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறியுள்ளனர். ஆனால், உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு செல்லாமல், குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டு அருமனை போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்த அருமனை போலீசார், சம்பவம் குறித்து விசாரித்து வரும் நிலையில் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை, குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது வழக்குப்பதிவு செய்யாமல் தப்பிக்க ஹரி முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மழலை குழந்தையை கொடும் தாக்குதலுக்கு உள்ளாகியதோடு சிகரெட்டால் சூடு வைத்து படு காயப்படுத்திய ஹரியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அக்குழந்தையை மீட்டு கேரளாவில் உள்ள பெண்ணின் வீட்டாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கூற்றாக உள்ளது. காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்பார்த்து குமரி மக்கள் காத்திருக்கும் நிலையில் நேர்மையான நடவடிக்கையை அரசு சார்பில் எடுக்கும் என்று நம்புவோம்.