• Mon. Apr 28th, 2025

நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கும் மருமகன்

Byவிஷா

Apr 16, 2025

உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா குழுமத்தின் உதவியாளர் கவிதாசிங் தனது மருமகன் இருட்டுக்கடையை வரதட்சணையாக தரும்படி மிரட்டுவதாக காவல்துறையிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி காவல்நிலையத்தில் கவிதாசிங் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது..,
எனது மகள் ஸ்ரீ கனிஷ்காவிற்கும் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2, 2025 அன்று தாழையத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, கனிஷ்கா தனது கணவருடன் கோவையில் வசித்து வந்தார். பல்ராம் சிங்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனை கனிஷ்கா கண்டித்ததால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த கனிஷ்கா கடந்த மார்ச் 15ம் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மறுநாள் இரவு, பல்ராம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் கவிதா சிங்கின் வீட்டிற்கு வந்து, கனிஷ்காவுடன் நல்ல முறையில் வாழ வேண்டுமென்றால் கூடுதல் வரதட்சணை தர வேண்டும் என்றும், நெல்லையில் இயங்கி வரும் இருட்டுக் கடையை பல்ராம் சிங்கின் பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்றும் மிரட்டினர்.
இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மகளின் எதிர்காலத்தைக் கருதி இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்த கவிதா சிங், பின்னர் பல்ராம் சிங் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் அநாகரிகமான குறுஞ்செய்திகளை அனுப்பி மிரட்டியதால், தனது உயிருக்கும், தனது பெற்றோருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே, பல்ராம் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவிதா சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.