தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று சபாநாயகர் அப்பாவுவின் இரங்கல் குறிப்போடு தொடங்கியுள்ளது.
தமிழக சட்டசபையின் கடைசி கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி முதல் மே 10-ந்தேதி வரை நடந்து முடிந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அத்துடன் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது .6 மாதத்துக்குள் கூட்ட வேண்டும் என்ற விதி அடிப்படையில், அடுத்த மாதம் (நவம்பர்) 10-ந்தேதிக்குள் தமிழக சட்டசபை கூட்ட வேண்டும். எனவே, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக சட்டசபை கூட்டத்தை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பை வாசித்தார்.