


இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு தவக்காலம் கடந்த மார்ச் 5ம்தேதி சாம்பல் புதன்தொடங்கியது.

அதனை தொடர்ந்து குருத்தோலை ஞாயிறையொட்டி நாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு இன்று கொண்டாடப்பட்டது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கு தந்தைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியப்படி பேராலய முகப்பிலிருந்து இருந்து துவங்கிய ஊர்வலம் கீழ்க்கோவில் வரை கீர்த்தனைகளை பாடியவாறு பவனியாக சென்றனர். அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

