திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வேட்பாளர் செல்லும் கிராமங்களில் பொதுமக்களை பார்த்து சாப்பிட்டீர்களா என நலம் விசாரித்து விட்டு பிரச்சாரத்தை துவக்குவதால் வாக்காளர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.

ஒட்டன்சத்திரம் திமுக வேட்பாளர் அமைச்சர் சக்கரபாணி ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட மஞ்சநாயக்கன்பட்டி, மொல்லம்பட்டி, புளியம்பட்டி, மேலக்கோட்டை, அமரபூண்டி, எரமநாயக்கன்பட்டி மற்றும் கணக்கன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் சூறாவளி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்துக்கு செல்லும் கிராமங்களில் மக்களிடம் சாப்பிட்டீர்களா என கேட்டு அவர் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கடந்த ஐந்தாண்டு காலத்தில் முதலமைச்சர் தலைமையிலான கழக அரசு நிறைவேற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களையும், ஒட்டன்சத்திரம் தொகுதிக்காகச் செய்யப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளையும் மக்களிடம் நெஞ்சார எடுத்துரைத்தார்.
ஒவ்வொரு வீதியாகச் சென்ற அவர், அனைத்துத் தரப்பு மக்களின் ஏகோபித்த வாக்குச் சேகரித்தார். பின்பு அவர் பேசுகையில் உதிர்த்த வார்த்தைகள், அரசியல் களத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தன. “எதிரிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எத்தனை குறைகள் சொன்னாலும் சரி… யாரை அதிகாரத்தின் அரியணையில் ஏற்ற வேண்டும், யாரை நிராகரிக்க வேண்டும் என்ற தெளிவு இந்த மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

இது வெறும் மேடைப் பேச்சுகளுக்கான, வெற்று வார்த்தைகளுக்கான ஆட்சியல்ல; மாறாக, ஒவ்வொரு சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் உண்மையான திராவிட மாடல்’ ஆட்சி!, என்றார்.




