மகளை விட நன்றாக படித்த மாணவனை குளிப்பானத்தில் எலிபேஸ்ட் கலந்து கொலைசெய்ததாக பெண் பரபரப்பு வாக்குமூலம்
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி மாலதி. இவர்களுடைய மகன் பால மணிகண்டன் (13). இவர், காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 2-ம் தேதி பள்ளியில் ஆண்டு விழா நடைபெற இருப்பதால் மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஒத்திகைகளில், பால மணிகண்டன் கலந்து கொண்டுள்ளார்.
இதனிடையே ஒத்திகை நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய பால மணிகண்டன், வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட பெற்றோர், உடனடியாக மணிகண்டனை மீட்டு காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் பால மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்துள்ளனர். பின்னர் பள்ளியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பால மணிகண்டனுடன் படிக்கும் சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா, பள்ளி வாட்ச்மேன் தேவதாஸ் என்பவரிடம் இரண்டு கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை கொடுத்து, 8-ம் வகுப்பில் படிக்கும் பால மணிகண்டனிடம் அவரது உறவினர் கொடுக்கச் சொல்லியதாக கூறி கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாணவியின் தாயார் சகாயராணி விக்டோரியாவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காரைக்கால் நகர் போலீசார் சகாயராணியை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, தனது மகளை விட நன்றாக படித்ததால் குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்து மாணவனை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.