சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் எதிர்க்கட்சிகளின் குடியரசு வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி, மற்றும் மூத்த நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்து அனைவரும் கலைந்துசென்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் விஜய் வசந்தின் பேனா காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அட என்னப்பா வெறும் பேனாதானே என சாதாரணமாக நினைப்பீர்கள். ஆனால் காணாமல் போன பேனா ரூ.1.50 லட்சம் மதிப்பிலானது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. நிகழ்ச்சிக்கு பின் பேனால் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த விஜய் வசந்த் பேனாவை யாரேனும் திருடி இருக்கலாம் என்று சந்தேகித்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
காணாமல் போயிருக்கும் பேனா விஜய் வசந்தின் தந்தையும், வசந்த அன்ட் கோ உரிமையாளரும், கன்னியாகுமரியின் முன்னாள் எம்பியுமான வசந்தகுமார் பயன்படுத்திய பேனா என்ற சென்டிமெண்டும் உள்ளது.தந்தை இறந்த பிறகு அதே தொகுதியில் எம்.பியாக வெற்றி பெற்ற விஜய் வசந்த் தன் தந்தையின் நினைவாக அந்த பேனாவை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில், ரூ.1.50 லட்சம் மதிப்பிலான அந்த பேனா காணாமல் போயிருப்பது விஜய் வசந்திற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.