புதுச்சேரி கூனிச்சம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம்- சுமதி தம்பதியினரின் மகன் மணிகண்டன். கடந்த 2010-ம் ஆண்டு 10 வயது இருக்கும் போது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கட்டுமான பணிக்காக மின் கம்பத்தில் இருந்து கொக்கி போட்டி திருட்டுதனமாக மின்சாரம் எடுத்து உபயோகித்து வந்தனர்.

ஆனால் பணிகள் முடிந்த பின்பும் அந்த மின் ஒயரை அப்புறப்படுத்தாததால் மழையின் போது அவ்வழியாக சென்ற மணிகண்டன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
இந்த உயிரிழப்புக்கு மின்துறையின் அலட்சியப்போக்கே காரணம் என கூறி இழப்பீடு வழங்க கோரி சிறுவனின் பெற்றோர் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவர்களுக்கு இழப்பீடு வழங்க மின்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதை எதிர்த்து அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு சென்றனர். உயர்நீதிமன்றமும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உடனடியாக இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இதுநாள் வரை இழப்பீடு வழங்கவில்லை.

இந்நிலையில் புதுச்சேரி நீதிமன்றம் உடனடியாக இழப்பீடு வழங்காததால் தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. 15 ஆண்டுகளாக போராட்டத்திற்கு பிறகு ரூ.20 லட்சம் இழப்பீடு பெற நீதிமன்ற அமீனா இன்று காலை பாதிக்கப்பட்டவர்களுடன் தலைமை செயலகம் வந்து ஜப்தி செய்ய முயன்றனர்.
இதனையடுத்து சட்டத்துறை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இவர்கள் இதுகுறித்த கடிதம் தங்களுக்கு வரவில்லை என்றும், துணைநிலை ஆளுநர் வந்தவுடன் அவரிடம் ஒப்புதல் பெற்று 10 நாட்களுக்குள் இழப்பீட்டு தொகைக்கான தொகை காசோலையாக வழங்குவதாக உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து நீதிமன்ற அமீனா மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அங்கிருந்து சென்றனர்.
உயிரிழந்த குழந்தைக்கு நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் 15 ஆண்டுகளாக ஒரு குடும்பம் தலைமைச் செயலர் வரை போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.