

பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆர்ஆர்ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் தேஜா, அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஆர்ஆர்ஆர் 550 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருந்த இப்படம் நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது. ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டம், பெத்தாபுரத்தில் உள்ள திரையரங்கில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை காண ரசிகர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வருகை தந்துள்ளார். மேலும் அவர் திடீரென திரைக்கு முன் துப்பாக்கியுடன் நின்றுள்ளார். அதனை கண்டு படம் பார்க்க வந்த ரசிகர்கள் அச்சமடைந்துள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
