• Sat. May 4th, 2024

தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்று மணி நேரம் பொது மக்களை காக்க வைத்த திமுகவினர் – ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பொது மக்கள்

ByN.Ravi

Apr 1, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தானில் தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, திமுகவின் நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதாகவும், அதற்கு முன்பாக சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சோழவந்தான் வெங்கடேசன் எம். எல் .ஏ. சாமி கும்பிட்டு விட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாகவும் , திமுகவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதன் அடிப்படையில், இன்று மாலை 5 மணி முதல் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு திமுகவினரால் பணம் கொடுத்து அழைத்து
வரப்பட்ட பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் வரத் தொடங்கினார்கள்.
இந்த நிலையில் 6 மணி ஆனது அதனைத் தொடர்ந்து, ஏழு மணி ஆனது அதனைத் தொடர்ந்து எட்டு மணிமானது, முதலில் ஆறு மணிக்கு வருவார் என்று சொன்னார்கள் பிறகு 7 மணிக்கு வருவார் என்று சொன்னார்கள் பிறகு எட்டு மணிக்கு வந்து விடுவார் என்று சொன்னார்கள்.
ஆனால், திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ ஆகியோர் இரவு 8 மணி வரை வராததால், திமுகவினரால் பணம் கொடுத்து அழைத்து
வரப்பட்ட பொதுமக்கள் விரக்தி அடைந்து ஒவ்வொருவராக கிளம்ப தொடங்கினார்.
இந்த நிலையில், 8 மணி அளவில் திண்டுக்கல் ஐ லியோனி மதுரை மாவட்டத்திற்கு வரவில்லை என்றும் இரண்டு நாட்களுக்கு அவருக்கு வெளியூரில் நிகழ்ச்சிகள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதால், நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதாக தெரிவித்தனர் .
ஆனால், ஊர்வலமாக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கும் காவல் துறையில் முறையான அனுமதி பெறாததால் பிரச்சாரம் செய்ய கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து, அங்கிருந்த கட்சியினர் கூறுகையில் ஏற்கனவே, சோழவந்தான் தொகுதியில் திமுகவிற்கு வாக்குகள் குறைவாக இருந்தாலோ தேனி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தோல்வி அடைந்தாலோதனது அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்து விடுவேன் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அலங்காநல்லூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி விரக்தியாக பேசியிருந்த நிலையில், முதல் முறையாக தொடங்க இருந்த தேர்தல் பிரச்சாரமும் எம்எல்ஏ மற்றும் திண்டுக்கல் ஐ லியோனி ஆகியோர் வராத காரணத்தால் ரத்து செய்யப்பட்டது. கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நிர்வாகிகளிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததாலும் ஆளுங்கட்சி தோரணையில் தொண்டர்களை மதிக்காமல் போனதுமே, இந்த நிலைமைக்கு காரணம் என்றும் திமுகவினர் பேசி சென்றதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர் .
எது எப்படி இருந்தாலும் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றது வேதனை அளிப்பதாக இருப்பதாக கட்சியினர் தெரிவித்துச் சென்றனர் .
தேனி தொகுதியில் போட்டியிடும் மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் நிலையில் ஆளுங்கட்சியானதிமுகவின் இந்த நிலை பரிதாபத்திற்குரியதாக இருப்பதாக அங்கிருந்தவர்கள்பேசிக் கொண்டனர்.
மேலும், ஏற்கனவே போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சோழவந்தான் நகர் பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருந்த நிலையில், மக்கள் அதிகம் கூடும் ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்ததால் போக்குவரத்தையும் வேறு பாதைக்கு மாற்றி விட்டிருந்தனர். இதனால், சோழவந்தானின் மற்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வெளியூருக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கும், ஆளாக்கப்பட்டு இருந்தனர். இவை அனைத்தும் திமுகவினரின் இந்த செயலால் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்ததாக கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *