தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து ஒவ்வொரு துறையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வாசித்தார்
இதைத் தொடர்ந்து 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை மார்ச் 15-ல் தாக்கல் செய்யப்பட்டது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வாசித்தார். இது திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட்டாகும், மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரசின் முழுமையான கடைசி பட்ஜெட்டாகவும் விளங்குகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 9:30 மணியளவில் சட்டமன்ற அமர்வு தொடங்குகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், வரி மாற்றங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து இன்றைய நாளில் திமுக, அதிமுக உட்பட பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.