தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறாத நிலையில் இன்று நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் தமிகா சுல்தானா முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பெரியகுளம் நகராட்சியின் 2.வது வார்டு உறுப்பினர் அமமுக.வை சேர்ந்த பால்பாண்டி என்பவர் பெரியகுளம் நகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கண்துடைப்பாக நடைபெற்றதாகவும், இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுகவைச் சேர்ந்த 6.வது வார்டு உறுப்பினர் ஹசீனா முகமது என்பவரும் நகர் மன்ற உறுப்பினர் மற்றும் பெரியகுளம் நகராட்சி ஆணையாளரிடம் விளக்கம் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

எனவே நகர் மன்ற தலைவரும், நகராட்சி ஆணையாளரும் பதில் கூறச் சொல்லி அமமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் இருவரது கோரிக்கையை ஏற்று சில நகர் மன்ற உறுப்பினர்களும் ஆதரவாக குரல் கொடுத்தனர். மேலும் இனிவரும் காலங்களில் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடக்க இருக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் உறுதி அளித்ததன் பேரில் நகர் மன்ற கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது.
மேலும் இதே கூட்டத்தில் பத்தாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் தனது பகுதியில் உள்ள மதுபான கூடத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் அதனை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கூட்டம் நடைபெறும் அரங்கில் அப்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரது கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பின் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.




