மயிலாடுதுறை இந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் உள்ள கடவுள் சிலையை தூக்கிச் செல்ல பயன்படுத்தப்படும் படிச் சட்டத்தின் வெள்ளி தகடுகள் கடந்த 2014-ம் ஆண்டு திருடுபோனது. இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தற்போது துப்பு துலங்கி உள்ளது.
அதில், அதே கோவிலில் தீட்சிதராக வேலை செய்து வந்த முரளி என்பவரும், பட்டராக வேலை செய்து வந்த ஶ்ரீனிவாச ரங்கன் என்பவரும் இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், இரண்டு பேரையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த திருட்டு சம்பவத்தில், தனியார் நகைக்கடையில் கோவிலுக்கு சொந்தமான வெள்ளி பட்டயங்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று அந்த நகைக்கடைக்கு விரைந்து சென்று இந்த வெள்ளி பட்டயங்களை பறிமுதல் செய்து, இதை யார் விற்பனை செய்தது..?
எப்போது விற்பனை செய்தார்கள்..? அவை என்னென்ன வடிவங்களில் விற்பனை செய்ய திட்டமிட்டார்கள்? என்பது குறித்து நகைக்கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், அதே கோவிலில் அர்ச்சகர்களாக பணியாற்றிய முரளி மற்றும் ஸ்ரீனிவாச ரங்கன் ஆகிய இருவரும் வெள்ளி பட்டயங்களை திருடி அதை நகைக் கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அர்ச்சகர்களாக வேலை செய்து வந்த முரளி மற்றும் பட்டராக வேலை செய்து வந்த ஸ்ரீனிவாச ரங்கன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த திருட்டு வழக்கில் கோவிலில் வேலை செய்து வரும் மேலும் சில அர்ச்சகர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளதால் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.