மதுரையில் பழமையான ஊரணிக்கரை முத்துமாரியம்மன் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு.காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியான மேல அனுப்பானடியில் கண்மாய்க்கரை பகுதியில் அமைந்துள்ளது பழமையான ஊரணிக்கரை முத்துமாரியம்மன் கோவில். இக்கோவிலின் முகப்பில் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. மக்கள் நடமாட்டம் மிகுந்த அப்பகுதியில் உள்ள இந்த கோவிலில், அந்த சாலை வழியாக செல்லும் பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு நடத்தி, உண்டியலில் காணிக்கைகளை செலுத்துவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை கோவில் பூசாரி ஸ்ரீனிவாசன் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவில் முகப்பில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு, இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்ற நிலையில், கோவிலின் பின்பக்க சுவர் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், இரும்புக்கம்பியை பயன்படுத்தி உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றுள்ளார். கோவில் உண்டியலில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு உள்ளது. மேலும் உண்டியலில் இருந்த சில்லரைகள் மற்றும் 10ரூபாய் நோட்டுக்களை மட்டும் மர்மநபர் விட்டுச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திருட்டு சம்பவம் குறித்து கோவில் பூசாரி ஸ்ரீனிவாசன் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.