• Sun. Apr 28th, 2024

குழந்தைகளை மையமாகக் கொண்ட திரில்லர் திரைப்படம் ‘டீன்ஸ்’

Byஜெ.துரை

Jan 22, 2024

புதுமை நாயகன் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட புதிய சாகச திரில்லர் திரைப்படம் ‘டீன்ஸ்’.

உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியானது.

இந்திய சினிமாவில் புதுமையான முயற்சிகளின் ஒட்டுமொத்த குத்தகைதாரராக கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேல் வெற்றிகரமாக இயங்கி வரும் நடிகர்-இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது புதிய பாதையில் இன்னொரு மைல் கல்லாக ‘டீன்ஸ்’ எனும் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லர் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் மற்றும் ரஞ்சித் தண்டபாணி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் ‘டீன்ஸ்’ தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர்.

மிகவும் வித்தியாசமான முயற்சியாக இந்த திரைப்படத்தின் முதல் பார்வை திரையரங்குகளில் வெளியாவது உலகிலேயே இது தான் முதல் முறை, அதுவும் உலகெங்கிலும், அதுவும் தணிக்கை சான்றிதழோடு.

இத்திரைப்படத்திற்காக இசை அமைப்பாளர் D. இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி ஆகியோருடன் முதல் முறையாக இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இணைந்துள்ளார்.

இமான் மற்றும் காவ்மிக் ஆரியின் சிறந்த படைப்புகளில் முன்னணி வகிக்கும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. படத்தொகுப்புக்கு ஆர். சுதர்சன் பொறுப்பேற்றுள்ளார்

இது குறித்து பேசிய இராதாகிருஷ்ணன் பார்த்திபன்,

“வணக்கத்திற்குரிய ஆடியன்ஸ், எங்கள் திரைப்படத்தின் முதல் பார்வை அனுபவம் இதோ உங்களுக்காக. முதல் முறையாக சென்சார் சான்றிதழோடு இது வெளியாகியுள்ளது. திரு D. இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி ஆகியோர் உடனான எனது முதல் சிறந்த படைப்பாக இது இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.

தொடந்து பேசிய அவர், “2024ம் ஆண்டின் முதல் மாதத்தின் 20ம் தேதியில் முதல் முறையாக திரையரங்குகளில் முதல் காட்சியின் இடைவேளையின் போது ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக என்னை ரசித்து வரும் அனைவருக்கும் முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முந்தைய படைப்பான ‘இரவின் நிழல்’ தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு அங்கீகாரங்களையும் பெற்று சாதனை படைத்த நிலையில் அவரது புத்தம் புதிய புதுமை திரைப்படம் ‘டீன்ஸ்’ புதிய முத்திரையை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *