ஒட்டன்சத்திரம் அருகே ஆன்லை சூதாட்டத்தில் ரூ.50 ஆயிரம் பணத்தை இழந்ததால் பட்டாதாரி வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கூத்தம்பூண்டி கிராமம் கருமாங்கிணற்றைச் சேர்ந்த அருண்குமார் (வயது 24) பி.காம். வரை படித்துவிட்டு வீட்டில் உள்ளார். இவரது தந்தை சங்கர் ஏற்கனவே இறந்துவிட்டார். தாயார் விஜயலட்சுமியின் பாதுகாப்பில் வளர்த்து வருகிறார். தாயார் வாங்கிக்கொடுத்த செல்போன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பங்கேற்று ரூ 50 ஆயிரம் வரை இழந்துள்ளார். இதனால் தாய் மற்றும் உறவினர்கள் அருண்குமாரை திட்டியதால் மனம் உடைந்த அருண்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் அருண்குமார் கிடைக்கவில்லை.
இது குறித்து போலீசில் தாயார் விஜயலட்சுமி புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கருமாங்கிணறு ஊர் பொதுகிணற்றில் அருண்குமாரின் உடல் நேற்று மாலை மிதந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு வீரர்கள் உடன் விரைந்து வந்து கிணற்றில் இருந்து அருண்குமாரின் உடல் மீட்கப்பட்டது. பின்னர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து கள்ளிமந்தையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பட்டதாரி வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்தால் மட்டும் இனி உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கமுடியும்.