19 வயது இளம் பெண்ணை கடத்தி கொலை செய்த வழக்கில் உத்தரகாண்ட் பா.ஜ.க தலைவரின் மகன் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பௌரி மாவட்டத்தில் ரிசார்ட் ஒன்றில் அங்கிதா பண்டாரி என்ற 19 வயது இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றிவந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதையடுத்து பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் போலீஸார் மெத்தனமாக இருந்து வந்ததாக தெரிகிறது. பின்னர் அங்கிதா பண்டாரியின் பெற்றோர் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்த வீடியோ உத்தரகாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீஸார் வழக்கை தீவிரமாக விசாரணை செய்தனர்.
பின்னர் அங்கிதா பண்டாரி வேலை செய்துவந்த ரிசார்டின் சி.சி.டி.வி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ரிசார்டின் உரிமையாளர் புல்கித் ஆர்யா, அங்கிதா பண்டாரி மேலும் இரண்டு பேர் வெளியே செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. ஆனால் திரும்பி வரும்போது அங்கிதா பண்டாரி மட்டும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் ரிசார்ட் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். புல்கித் ஆர்யா, ரிசார்டிற்கு வரும் விருந்தினர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட அங்கிதா பண்டாரியை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாகப் பேசுவதற்காகத்தான் புல்கித் ஆர்யா, அங்கிதா பண்டாரி உள்ளிட்ட 4 பேர் வெளியே சென்றனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அங்கிதா பண்டாரியை கொலை செய்து கால்வாயில் அவரது உடலை வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.