• Fri. Apr 26th, 2024

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதைகள் என்ன இருக்கிறது என்று தேடித் தேடிப் பார்த்து இன்றைய இயக்குனர்கள் படமெடுக்கிறார்கள். இந்தப் படத்தின் கதையும் சொல்லப்படாத ஒரு கதைதான். படத்தை ரசிக்கும்படியாகவும், சுவாரசியமாகவும் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு.
காதலர்களுக்கு இடையில் இருக்கும் ‘ஈகோ’ தான் படத்தில் முக்கிய பிரச்சினை. கொஞ்சம் ‘குஷி’ படம் மாதிரியான ஈகோ என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதில் ஒரு ‘இடுப்பு’ விவகாரத்தால் பிரிந்து போகிறார்கள். இதில் ஒரு ‘குழந்தை’ விவகாரத்தால் பிரிந்து போகிறார்கள். பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் திரைக்கதையில் சுவாரசியமாக இருக்க வேண்டும், அது இந்தப் படத்தில் இருப்பதால் ரசிக்கவும் வைக்கிறது.கவின், அபர்ணா தாஸ் இருவரும் கல்லூரியில் படிப்பவர்கள், காதலர்கள். ஒரு நாள் படுக்கை வரை அவர்களது நெருக்கம் போக அபர்ணா கர்ப்பமாகிறார். கவின் கர்ப்பத்தைக் கலைத்துவிடச் சொல்ல, அபர்ணா குழந்தை பெற்றே தீருவேன் என்கிறார். இந்த விவகாரம் இருவரது குடும்பத்திற்கும் தெரியவர பெற்றோர்களின் கோபத்தால் கவின், அபர்ணா தனித்துவிடப்படுகிறார்கள். இருவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தங்குகிறார்கள். அவ்வப்போது இருவருக்கும் சண்டை வருகிறது.ஒரு நாள் பெரும் சண்டையாக வர ஆபீஸ் செல்லும் கவின் கோபத்தில் மொபைல் போனை ஆப் செய்து வைக்கிறார். அந்த சமயத்தில் அபர்ணாவுக்கு பிரசவ வலி எடுத்து மருத்துவமனையில் குழந்தை பெறுகிறார். இரவு வீட்டிற்குத் திரும்பிய பின்தான் அபர்ணாவுக்கு குழந்தை பிறந்தது தெரியவர மருத்துவமனைக்கு ஓடுகிறார் கவின். அங்கு குழந்தை மட்டும் இருக்கிறது, அபர்ணா இல்லை. குழந்தையைக் கூடப் பார்க்காமல் அபர்ணா அவரது பெற்றோருடன் சென்றது கவினுக்குத் தெரிய வருகிறது. இனி, ஜென்மத்திற்கும் அபர்ணாவை மன்னிக்க மாட்டேன் எனச் சொல்லி, குழந்தையை அவரே வளர்க்க ஆரம்பிக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக் கதை.
படிக்கும் போது காதல் என்பதையே பெரும்பாலான பெற்றோர் எதிர்ப்பார்கள். ஆனால், படிக்கும் போதே குழந்தையா என்பதை எந்த பெற்றோர்தான் ஏற்றுக் கொள்வார்கள். அப்படி ஒரு நிலையில் கவின், அபர்ணா இருவரும், பெற்றோர் ஆதரவு இல்லாமல், நண்பன் உதவியுடன் தனியே தங்களது வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். மெச்சூரிட்டி இல்லாத வயதில் குழந்தை, வாழ்க்கையை எதிர் கொள்ளும் பிரச்சினை அனைத்தும் அவர்களுக்கு வருகிறது. கவின் எதையும் கணக்கு போட்டு வாழ்க்கையை நடத்த, சின்னச் சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுகிறார் அபர்ணா. அதுவே இருவரையும் பிரிக்கவும் செய்கிறது. கவின், அபர்ணா இருவரும் இதற்கு முன்பு பல படங்களில் நடித்த அனுபவசாலிகள் போல இந்தப் படத்தில் கதாபாத்திரத்தையும், காட்சிகளின் தன்மையையும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அவர்களது நடிப்புதான் படத்திற்கு பெரும் பலமே. அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி. சமீபத்திய படங்களில் கலங்க வைத்த ஒரு காட்சி என்று சொல்லலாம்.
கவினிற்கு எந்த சூழ்நிலையிலும் உதவி செய்யும் உத்தம நண்பனாக ஹரிஷ். திடீரென உதவி செய்யும் ஒரு நல்ல மனிதராக விடிவி கணேஷ். அலுவலகத்தில் அவ்வப்போது குறும்புத்தனம் செய்து மாட்டிக் கொள்ளும் பிரேம் ஆண்டனி என சில கதாபாத்திரங்கள் படத்தில் குறிப்பிட வேண்டியவை. கவின் அப்பா பாக்யராஜ், அம்மா ஐஸ்வர்யாவுக்கு பெரிய வேலையில்லை. கவின் மகனாக மாஸ்டர் இளன் அழகாய் நடித்திருக்கிறார்.அறிமுக இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினுக்கு முதல் படத்திலேயே அவரது திறமையை வெளிப்படுத்தக் கூடிய உணர்வு பூர்வமான ஒரு படம். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கதையுடன் இணைந்து பயணிக்கும் எழிலரசனின் ஒளிப்பதிவு, தேவையான காட்சிகளை சரியாகத் தொகுத்திருக்கும் கதிரேஷ் அழகேசனின் படத்தொகுப்பு பாராட்டுக்குரியது.

டாடா – காதலர்களுக்கானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *