• Sat. Apr 27th, 2024

தமிழிசை ராஜினாமா ஏற்பு: சிபி ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு

Byவிஷா

Mar 19, 2024

தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு இரண்டு மாநிலங்களுக்கான கூடுதல் 2 மாநிலங்களுக்கான ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை, தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இது தொடர்பான கடிதத்தை குடியரசுத் தலைவரிடம் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றால் என் அன்பை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுநராக இருந்த போதே, மக்கள் ஆளுநராகப் பணியாற்றினேன். தீவிரமாக மக்கள் பணியாற்றவே, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து உள்ளேன்.

தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பத்துக்கு கட்சித் தலைமை தடை விதிக்கவில்லை. ஆளுநர் பதவிக் காலத்தில் எனது அரசியல் அனுபவம் அதிகரித்துள்ளது. நான்கரை ஆண்டுகால எனது பதவிக் காலத்தில் 4 முதலமைச்சர்கள் மற்றும் 2 தேர்தல்களை சந்தித்துள்ளேன். எனது விருப்பத்தின் பெயரில், மக்கள் பணியாற்றவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன்’’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜனின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து ஜார்க்கண்ட் ஆளுநராக உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் 2 மாநிலங்களுக்கான ஆளுநர் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜார்க்கண்ட் ஆளுநர், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆகிய பதவிகளை கோயம்புத்தூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வகிக்க உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *