சென்னையை மிரட்டிக் கொண்டிருக்கிறது வடகிழக்குப் பருவ மழை. முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கும்,அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை பிறப்பித்துக் கொண்டிருக்க… அதன்படியே துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் சுற்றிச் சுற்றி ஆய்வு செய்துகொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் முதல்வர் பெருமிதப்பட்டுக் கொள்ளும் ராம்சார் சதுப்பு நிலப் பகுதியில் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு வீடுகள் கட்ட அனுமதி கொடுத்த விவகாரத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது அறப்போர் இயக்கம்.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் இதுகுறித்து விளக்கினார்.
“சென்னை பெரும்பாக்கத்தில் பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலப்பகுதியில் சட்டத்தை மீறி பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்னும் நிறுவனத்திற்கு 1250 பன்மடங்கு குடியிருப்பு அடுக்குமாடி வீடுகள் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் கட்டுமான திட்ட அனுமதியை சட்டவிரோதமாக வழங்கி அந்த பகுதியில் மேலும் வெள்ளம் ஏற்படுவதற்கான வழிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையும், வனத்துறையும், சென்னை பெருநகர கட்டுமான குழுமம் துறையும் செய்துள்ளது.
இந்த ஊழல் பற்றிய புகார் மற்றும் ஆதாரங்களை அறப்போர் இயக்கம் இன்றைய தினம் (அக்டோபர் 23) லஞ்ச ஒழிப்பு துறை, முதலமைச்சர், தலைமை செயலாளர், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை என பத்து சம்பந்தப்பட்ட துறை பொது ஊழியர்களுக்கு புகார் அனுப்பியுள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் போன்ற ஈர நிலங்களை பாதுகாப்பதற்காக அரசுகளுக்கு இடையே போடப்படும் ஒப்பந்தம் தான் ராம்சார் ஒப்பந்தம். இதன்படி 2022-ல் ஏப்ரல் 8ம் தேதி 1247.5 ஹெக்டர் அதாவது 3080 ஏக்கர் அளவிற்கு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இதை பெருமையுடன் கொண்டாடியது.
இதன் பொருள் என்னவென்றால் 1247 ஹெக்டரில் ஏற்கனவே கிட்டத்தட்ட 690.65 ஹெக்டர் (1705 ஏக்கர்) நம் வனத்துறையிடம் காப்புக் காடாக உள்ளது. மீதமுள்ள 547 ஹெக்டரில் (1375 ஏக்கர்) உள்ள அரசு மற்றும் தனியார் பெயரில் உள்ள நிலங்களை மீட்டெடுப்பது அரசின் முக்கிய கடமை.
மேலும் இந்திய அரசின் 2017 ஈரநிலம் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்ட விதிகளின்படி ராம்சார் நிலங்கள் நிர்வகிக்கப் பட வேண்டும். இந்த சட்டத்தின் பிரிவு 3 படி ராம்சார் நிலங்கள் ஈர நிலங்கள் ஆகும். மேலும், இந்த சட்டத்தின் பிரிவு 4 படி இந்த நிலங்களில் எந்த விதமான நிரந்தர கட்டுமானங்களும் அனுமதிக்க முடியாது.

ஆனால் இந்த ராம்சார் பகுதிக்கு உட்பட்ட சர்வே எண்கள் 453, 495, 496, 497, 498 இல் உள்ள கிட்டத்தட்ட 14.7 ஏக்கர் நிலத்தில் 1250 அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்காக பிரிகேட் மார்கன் என்னும் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதியும் கட்டுமான அனுமதியும் கோரியது.
ஜூலை 2022 அதாவது ராம்சாரில் இந்த நிலம் ஏப்ரல் 2022ல் பதிவிடப்பட்ட பிறகு, பிரிகேட் என்டர்பிரைசஸ் லிமிடட் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதிக்கு முன்பாக கோரப்படும் குறிப்பு விதிமுறைகள் (Terms of Reference) அனுமதி கேட்டு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையதத்திற்கு (SEIAA – State environmental impact assessment authority) விண்ணப்பம் செய்கிறது.
SEIAA இந்த விண்ணப்பத்தை மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழுக்கு (State Expert Appraisal Committee – SEAC) அனுப்புகிறது. இந்த விண்ணப்பம் வந்த உடனேயே இது ராம்சார் தளத்தின் உள்ளே உள்ளது என்று சொல்லி இந்த விண்ணப்பத்தை நிராகரித்து இருக்க வேண்டும்.
ஆனால் SEAC பரிந்துரைப்படி SEIAA அனுமதியை பிப்ரவரி 2023இல் குறிப்பு விதிமுறைகள் (Terms of Reference) அனுமதி கொடுக்கிறது. இதன் அடுத்த வழிமுறையான சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு பிரிகேட் நிறுவனம் ஆகஸ்ட் 2023ல் விண்ணப்பிக்கிறது.
SEAC செப்டம்பர் 27 2023 அன்று நடந்த தனது 411வது சந்திப்பில் இதைப்பற்றி பேசும் பொழுது இந்த இடம் பள்ளிக்கரணை ராம்சார் நிலத்திற்கு அருகில் உள்ளது என்று ஒரு பொய்யை பதிவிடுகிறது.
இணையதளத்தில் உள்ள ராம்சார் மேப்பை எடுத்துப் பார்த்து இருந்தால் கூட இந்த சர்வே எண் ராம்சார் தளத்தில் உள்ளே தான் வருகிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்திருக்கும். மேலும் ராம்சார் ஈரநிலத்தின் லேட்டிடியூட் லாங்கிட்யூட் கேட்பதற்கு பதிலாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் லேட்டிடியூட் எல்லையை மட்டும் கேட்கிறார்கள். வினாத்தாளை எழுதிவிட்டு அதற்கு ஏற்ப கேள்விகள் கேட்பது போல் கேட்டுள்ளார்கள்.
வனத்துறை இந்த நிலம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இருந்து 65 மீட்டர் தொலைவில் உள்ளதாக ஒரு பொய்யான அறிக்கையை கொடுக்கிறது. ஒருவேளை ராம்சார் எல்லை வனத்துறைக்கு தெரியவில்லை என்று எடுத்துக் கொண்டாலும் இந்த நிலமானது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 534/4 பள்ளிக்கரணை சதுப்புநிலை எல்லையில் உள்ளது அவர்களுக்கு தெரியும். இருந்தும் கூட இது 0 மீட்டரில் உள்ளது என்று சொல்லாமல் 65 மீட்டர் தொலைவில் உள்ளதாக ஒரு பொய்யான அறிக்கையை கொடுக்கிறது.
இவையெல்லாம் மீறி SEAC தன்னிச்சையாக இதை ஆய்வு செய்து இருக்க வேண்டும் குறைந்தபட்சம் ராம்சாரின் எல்லையாவது அவர்கள் மாநில ஈரநில ஆணையத்திடம் (State Wetland Authority) யிடம் கேட்டிருக்க வேண்டும்.
இறுதியாக டிசம்பர் 11, 2024 அன்று நடந்த 517 ஆவது சந்திப்பில் மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழுக்கு (State Expert Appraisal Committee – SEAC) சுற்றுசூழல் அனுமதிக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டது. ஜனவரி 20, 2025 அன்று மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு (SEIAA) சுற்றுச்சூழல் அனுமதி கடிதத்தை மார்கன் பிரிகேட் நிறுவனத்திடம் கொடுத்துவிடுகிறது.

மின்னல் வேகத்தில் பெருநகர சென்னை வளர்ச்சிக்குழுமம் என்று சொல்லப்படும் CMDA சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த மூன்றே நாளில் கட்டுமான அனுமதியை கொடுக்கிறது.
இன்னொரு பெரிய வேடிக்கை என்னவென்றால் சென்னையில் 2024 ஆம் ஆண்டு நடந்த குளோபல் இன்வெஸ்டர் சந்திப்பில் பிரிகேட் பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் கட்டப்போகும் இந்த 1250 வீடுகளை தமிழ்நாட்டில் இந்த நிறுவனம் செய்யும் கிட்டத்தட்ட 2000 கோடி முதலீடு என்று முதலமைச்சர் .ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா இந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளனர்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்டெடுப்பேன் என்று சொல்லி அப்பட்டமாக தன்னுடைய ஆட்சியில் பள்ளிக்கரணை சதுப்பு நில ராம் சார் பகுதியில் மிகப்பெரிய கட்டிடங்கள் எழுப்பி வெள்ளத்தை உருவாக்கி அங்கு இருக்கும் மக்களை மேலும் வெள்ளத்தில் பாதிக்க செய்யும் வகையில் அந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த முதல்வர் திரு. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?
இப்படித்தான் மாநிலத்தில் முதலீடுகள் செய்து கொண்டிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு டிஆர்பி ராஜா பதில் சொல்வாரா? CMDA சர்குலேஷன் நோட்டில் கையெழுத்து போட்ட அமைச்சர் சேகர்பாபு பதில் சொல்வாரா? அல்லது மாநில ஈரநில ஆணையத்திற்கு தலைவராக இருந்த அப்போதைய வனத்துறை அமைச்சர் பொன்முடி பதில் சொல்வாரா? அல்லது சுற்றுச்சூழல் அனுமதி கொடுத்த சுற்றுச்சூழல் துறையின் அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு தான் பதில் சொல்வாரா?” என்று கேள்விகளை அடுக்கியுள்ளார் அறப்போர் ஜெயராம் வெங்கடேசன்.













; ?>)
; ?>)
; ?>)