• Mon. Jan 20th, 2025

பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல்

Byவிஷா

Jun 8, 2024

ஜூன் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் மாணவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் ஜூன் 10ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு எனக் கூறிவிட்டு வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட ஏதுவாக அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில் சத்துணவு திட்டத்தில் பயன் பெற்று வரும் குழந்தைகளுக்கு காமராஜர், அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதாவின் பிறந்தநாள் தினத்தில் இனிப்பு பொங்கல் வழங்கப்படுவது போல இனிவரும் காலங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்தநாள் நாட்களில் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்படும் என ஏப்ரல் 14ம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜூன் 3ம் தேதி விடுமுறை விடப்பட்டதை அடுத்து வரும் முதல் பணிநாளான ஜூன் 10 ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.