
கால்பந்து விளையாட்டு என்றால் சட்டென்று நினைவுக்கு வரும் நட்சத்திர வீரர்களில் ஒருவர் போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர், தனது சிறப்பான ஆட்டத்தினாலும், கட்டுக்கோப்பான உடல் தகுதி மூலமும் உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார்.

இந்தியாவில் வடகிழக்கு மாநிலம் மற்றும் கோவாவில் கால்பந்து விளையாட்டு பிரபலம். இந்தியாவை கிரிக்கெட் ஆக்கிரமித்த போதிலும், இங்கு கால்பந்து விளையாட்டுக்கு இன்னும் மவுசு குறையவில்லை.
இந்த நிலையில், கோவா மாநிலம் பனாஜியில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிரமாண்ட சிலை நேற்று திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவா மாநில அமைச்சர் மைக்கேல் லோபோ கூறியதாவது:
‘‘இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகவும், கால்பந்தை கோவா மாநிலம், இந்தியாவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகவும் இந்த சிலை நிறுவப்பட்டுள்ளது. நம்முடைய குழந்தைகள் இதுபோன்ற உலகளவிலான ஜாம்பவான்கள் போன்று வர வேண்டும் என விரும்புகிறோம்’’ என்றார்.