• Mon. May 12th, 2025

ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் சிலுவைப் பாதை ஜெபவழிபாடு..,

புனித வெள்ளியை முன்னிட்டு கம்பம் ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், மண்ணுயிருக்காக இயேசுகிறிஸ்து தன்னுயிர் ஈந்த நாள் நிகழ்வு நடைபெற்றது.

“உங்களில் தலைமை தாங்க விரும்பும் யாரும் முதலில் எல்லோருக்கும் பணியாளாக இருந்து, தொண்டு செய்ய துணிவு இருக்க வேண்டும்” என்றவர் இயேசு. அவரது போதனைகளால் சாமான்ய யூத மக்கள் அவரை “மேசியா” (மக்களை மீட்டுக் காக்க வரும் வலிமை மிக்க அரசன்) என்று அழைத்தனர்.

இயேசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறித்தவ நம்பிக்கை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசுநாதர் அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் நினைவுகூறும் நாள் புனித வெள்ளி. இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இந்நாளில் தேவாலயங்களில், நாள் முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகளும், சிலுவை பாதை ஊர்வலமும் நடைபெறும்.

புனித வெள்ளியை முன்னிட்டு இன்று மாலை கம்பம் ஆரோக்கிய அன்னை ஆலய வளாகத்தில் அருட்தந்தை பாரிவளன் தலைமையில் சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவை சுமந்து சென்ற 14 இடங்கள் நினைவுகூறப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பங்கு இறைமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சிறப்பு ஆராதனை வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில், அருட்பணி பேரவை, நிதிக்குழு, விழாக்குழு, சேவா மிஷனரி அருட்சகோதரிகள், கம்பம், கூடலூர், ஆங்கூர்பாளையம், லோயர்கேம்ப், நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி இறைமக்கள் கலந்துகொண்டனர்.