• Wed. May 8th, 2024

இவங்கள எல்லாம் விட்டுறாதீங்க ஸ்டாலின்… முதல்வருக்கு கே.பாலாகிருஷ்ணன் பரபரப்பு கடிதம்!..

By

Aug 20, 2021

நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு மரணமடைந்த சுப்பிரமணியன் வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, டிஜிபி, ஏடிஜிபி (சிபிசிஐடி), கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: “கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பட்டம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் ரேவதி என்பவரது கணவர் சுப்ரமணி, கடந்த 2015-ம் ஆண்டு காவல்துறையினரால் ஒரு வழக்கு விசாரணைக்கு நெய்வேலி டவுன்சிப் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அப்போது அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ராஜா, மற்றும் காவலர்கள் செந்தில்வேல், சௌமியன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து மிருகத்தனமாக தாக்குதல் நடத்தியதில் மரணமடைந்தார்.

சுப்ரமணியின் மரணம் தொடர்பான வழக்கு (குற்ற எண் 269 / 2015) சிபிசிஐடி காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணையும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும் (S.C. No 95/2019) நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸார் மீது கொலை வழக்கு (302) பதிவு செய்வதற்கு மாறாக, 304 A II என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது முறையற்றதாகும்.

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர்கள் செந்தில்வேல், சௌமியன் ஆகியோர் வழக்கு தொடங்கிய நாள் முதல் இன்று வரை ஒரு நாள் கூட பணியிடை நீக்கம் செய்யப்படாமல் தொடர்ந்து பணியில் நீடித்து வருகின்றனர். வழக்கமாக கொலை குற்றச்சாட்டுக்குள்ளானவர்கள் கைது செய்யப்படும் நடைமுறை இவர்கள் மீது மேற்கொள்ளப்படவில்லை. அனைத்துக்கும் மேலாக இந்த குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் குற்றம் நடந்துள்ள அதே கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பணியில் நீடித்து வருகின்றனர்.

இதனால் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ரேவதியையும், அவர்களது குடும்பத்தினர்கள், உறவினர்களையும் மிரட்டி வழக்கை வாபஸ் வாங்கச் செல்லி கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். வழக்கின் விசாரணைக்கும் முறையாக ஆஜராகாமலும், வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், இழுத்தடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், சாட்சிகளையும் மிரட்டி வருகின்றனர்.

இது குறித்து, ரேவதி கடலூர் மாவட்ட கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையில்லாததால், டிஜிபிக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட ரேவதி தனக்கு நட்ட ஈடு வேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அவருக்கு ரூ. 30,09,648 நஷ்ட ஈடு வழங்கிட வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையிட்டு மனுவினையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஆனால், தற்போது வரை அவருக்கு நஷ்டஈடு வழங்கவில்லை.

எனவே, முதல்வர் இப்பிரச்சினையில் நேரிடையாக தலையிட்டு, தனது கணவனை இழந்து தனது குழந்தைகளுடன் நிர்க்கதியாக நிற்கும் அபலைப் பெண் ரேவதிக்கு உரிய நீதி கிடைப்பதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

  1. குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ராஜா, செந்தில்வேல், சௌமியன் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்திட வேண்டும்.
  2. வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளை மிரட்டுவது, வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுப்பது போன்ற வகையில், அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் இவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.
  3. இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தண்டனை பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
  4. சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி இழப்பீட்டுத் தொகையான ரூ.30,09,648 ரேவதிக்கு உடன் வழங்கிட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  5. தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வரும் ரேவதிக்கும், அவரது குழந்தைகளுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *